திருப்பத்தூர் அருகே நிறுத்தப்பட்டுள்ள மர்ம கார் - ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடையதா? என விசாரணை

 
sbi

திருப்பத்தூர் அருகே மர்ம கார் ஒன்று சந்தேகப்படும் வகையில் நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட காரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நள்ளிரவில் 4 ஏடிஎம் மையங்களை கேஸ் வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து 72 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 10வது தெருவில் இயங்கி வரும் ஸ்டேட் பேங் ஏடிஎம், தண்டராம்பட்டு சாலையில் உள்ள ஏடிஎம், கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்த ஏடிஎம், போளூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஏடிஎம் என 4 ஏடிஎம்களில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவம் போலீசாருக்கு பெரிய சவாலை உண்டாக்கி உள்ளது. அரியானா போன்ற வட மாநிலங்களில் இருந்து வந்த கொள்ளையர்கள் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

atm robbery

இந்த நிலையில் இன்று காலை திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் ரோட்டில் கொரட்டியில் மர்ம கார் ஒன்று சந்தேகம் அளிக்கும் வகையில் நீண்ட நேரம் நின்றது. இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று காரை சோதனை நடத்தினர். கார் கேரள பதிவு எண்ணை கொண்டுள்ளது. கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, சீட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.காரில் மஞ்சள் பொடி தூவி உள்ளனர். ஏ.டி.எம். கொள்ளையர்களை போலீசார் தேடிவரும் நிலையில் மர்ம கார் சிக்கியுள்ளதால் ஏ.டி.எம். கொள்ளையில் தொடர்புடைய கும்பல் வந்த காரா? என்ற கோணத்தில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கேரள வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.