பணத்தேவைக்காக விற்க வரலாறு கைசரக்கல்ல.. தேசத்தின் பொக்கிஷம் - சு வெங்கடேசன் ஆவேசம்!!

 
su venkatesan

அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் ,இந்திய வரலாற்றின் மகத்தான சாட்சியங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்களை ஏலம் விடப் போவதாக பிரசார் பாரதி அமைப்பு முடிவெடுத்துள்ளதற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

venkatesan

இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "வரலாற்று ஆவணங்களை விற்பது தேசதுரோகம் என்றும் பிரசார் பாரதி அமைப்பின் முடிவை கைவிடுமாறு  ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் அவர்களுக்கு நான் எழுதியிள்ள கடிதத்தின் விபரம் வருமாறு:-

“தன்னிடம் உள்ள வரலாற்று ஆவணங்களை ஏலம் விடப் போவதாக பிரசார் பாரதி அமைப்பு (அக்:8) முடிவெடுத்துள்ளது. இவர்கள் ஏலம் விடப் போகிற ஆவணங்களில் அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் உள்ளிட்ட  இந்திய வரலாற்றின் மகத்தான சாட்சியங்கள் அடங்கும்.நிகழ்கால அரசியல் தேவைகளுக்காக வரலாற்றினை சிதைக்க முயலும் எந்த ஒரு முயற்சியையும் அனுமதிக்க முடியாது.



இந்திய வரலாற்றின் நிகழ்வுகள் அதன் காலம், சூழல் சாராது தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அது தேசத்தின் அரசியலை, அமைதியை, சமாதானத்தை எதிர்மறையாக பாதிக்க கூடும். ஆகவே கார்ப்பரேட் ஊடகங்கள் கைகளில் இதன் உரிமைகள் செல்வது அறிவார்ந்த செயலாக இருக்காது. இந்த சேமிப்பு ஆவணங்களுக்கு சந்தையில் நல்ல விலையும், தேவையும் இருப்பதால் அதை "பணமாக்க" போவதாக பிரசார் பாரதி அறிவித்துள்ளது. இப்படித் தரப்படும் உரிமைகளில் "தனி உரிமைகளும்" (Exclusive rights) அடக்கம்.இது அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடு கட்டுவதற்கான பணம் பண்ணும் பிரச்சினை அல்ல. சமூகத்தின் மீது நீண்ட கால விளைவுகளை உருவாக்குகிற பிரச்சினை. கண்களில் படுவதையெல்லாம் விற்க முனையக் கூடாது. கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கப்பட வேண்டியது வரலாறு. ஆகவே பிரசார் பாரதியின் முடிவை தடுத்து நிறுத்துமாறு வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.