பாலிமர் செய்தியாளர் முத்துக்குமார் மறைவு- அன்புமணி ராமதாஸ், தமிழிசை இரங்கல்
பாலிமர் செய்தியாளர் முத்துக்குமார் மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் நேற்றிரவு நிகழ்ந்த சாலை விபத்தில் பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் முத்துக்குமார் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “பாலிமர் செய்திகள் தொலைக்காட்சியின் நெல்லை மாவட்ட செய்தியாளர் சகோதரர் திரு.முத்துகுமாரசாமி அவர்கள் சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பத்திரிக்கைச் சகோதரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். திருநெல்வேலி செல்லும்போதெல்லாம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மற்ற பத்திரிக்கையாளர்களுடன் அவரை சந்தித்தது என் நினைவுகளில் நிழலாடுகிறது.... அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் பத்திரிக்கைச் சகோதரர்களோடு துன்பத்தை பகிர்ந்து கொள்கிறேன்...
பல சவால்களை சந்தித்து ஊடகப் பணிகளில் ஈடுபடும் பத்திரிக்கை சகோதரர்கள் பணியின்போதும், பணி முடிந்து பயணம் செய்யும்போது மிகுந்த கவனமாக பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.