தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மறைவு : அரசியல் தலைவர்கள் இரங்கல்..

 
தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மறைவு : அரசியல் தலைவர்கள் இரங்கல்..


தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.   

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நியூஸ் தமிழ் 24×7 செய்தித் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சகோதரி செளந்தர்யா அமுதமொழி  உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். ஊடக உலகில் சாதித்திருக்க வேண்டிய சகோதரி இளம் வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தது அவரது குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சி பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும்,  அனுதாபங்களும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.  

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மறைவு : அரசியல் தலைவர்கள் இரங்கல்..

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: “செய்தி வாசிப்பாளராக  NewsTamilTV24x7   தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த பத்திரிகையாளர், சகோதரி சௌந்தர்யா அமுதமொழி அவர்கள், உடல் நலக் குறைவால் இன்று காலமான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. ஊடகத் துறையில் பல சாதனைகள் படைக்கும் கனவுகளோடு இருந்த சகோதரி சௌந்தர்யா அமுதமொழி அவர்களை, இளம் வயதிலேயே பறிகொடுத்திருக்கும் அவரது, குடும்பத்தினருக்கும்,  NewsTamilTV24x7  ஊடக நண்பர்களுக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.  இந்தக் கடினமான நேரத்தில் இருந்து அவர்கள் மீண்டு வரவும், அவரது ஆன்மா சாந்தியடையவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ” என்று தெரிவித்துள்ளார்.  

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நியூஸ் தமிழ் 24*7 தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் செல்வி.சௌந்தர்யா அவர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.  செல்வி.சௌந்தர்யா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும், நியூஸ் தமிழ் 24*7  தொலைக்காட்சி பணியாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.