பூண்டி, புழல் ஏரிகளில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு!
சென்னையை வடகிழக்குப் பருவமழை ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக மழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதேபோல அதன் அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளிலும் வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது தென்கிழக்கு வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இது இன்று மாலை மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கிறது.
இதனால் மேற்கண்ட நான்கு மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக சென்னையின் முக்கிய நீராதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ஏற்கெனவே இந்த ஏரிகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும், விடாது பெய்யும் மழை மீண்டும் ஏரிகளை நிரப்பி வருகிறது.
அந்த வகையில் புழல் ஏரிக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக இருக்கிறது. நீர் திறப்பு 2,000 லிருந்து, 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 8,000 கன அடியாக இருக்கிறது. நீர் திறப்பு 5,000லிருந்து, 6,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 5,240 கன அடியாக இருக்கிறது. நீர் திறப்பு விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சோழவரம் ஏரி நீர்வரத்து ,3625 கன அடியாக உள்ளது, நீர் திறப்பு 2151 கன அடியாக இருக்கிறது.