தமிழர்களுக்கு அதிகார பகிர்வு : புத்த துறவிகள் எதிர்ப்பு!!

 
tn

பௌத்த விகாரங்களை நிறுவி வரும் புத்த துறவிகளிடம் தான் ஈழத்தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வேல்முருகன் எம்எல்ஏ எச்சரித்துள்ளார்.

இதுக்குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் ,   எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள  அறிக்கையில், "ஈழத்தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்கக்கூடாது என இலங்கையில் உள்ள புத்த துறவிகள் எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் அதிபர் விக்ரமசிங்கேவுக்கு கடிதம் எழுதியிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.இலங்கை ஆட்சியில் அதிகாரத்தில் பன்னெடுங்காலமாக அதிகாரம் செலுத்தி வரும் புத்த துறவிகள்,  ஈழத்தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்கக்கூடாது என்று கூறுவதில் வியப்பேதுமில்லை. இதனை நாம் அறிந்தது தான்.

velmurugan

ஏனென்றால், சிங்கள புத்த துறவிகள் என்றுமே தமிழர்களுக்கு எதிரி தான். இதற்கான வரலாற்று சான்றுகள் ஏராளம். தமிழர்களுக்கு உரிமை கிடைத்து விடக்கூடாது என புத்த துறவிகள் கூறுவது, வரலாற்றின் நீட்சியே.உயிர்க் கொலை செய்வது பாவம்; ஆனால் தமிழர்களைக் கொல்வது பாவமல்ல என்பதுதான் சிங்கள புத்த துறவிகளின் முழக்கம். பிரதமர் பண்டார நாயகா – தந்தை செல்வா போட்ட ஒப்பந்தத்தை 1956 இல் கிழித்தெறிந்து தமிழர்களுக்கெதிரான பெருங் கலவரத்தைத் தூண்டியவர்கள் புத்த துறவிகள் தான்.  சிறு சிறு உரிமைகளைத் தமிழர்களுக்குத் தர ஆட்சியாளர்கள் ஒப்புக் கொண்டாலும் அதைத் தடுக்க, வீதிக்கு வந்து போராடுவோர் சிங்கள புத்த துறவிகள் தான்.

அகிம்சையை வலியுறுத்துவதும், உயிர்க் கொலை செய்வது பாவம் என்பதும், அவர்கள் மீது தமிழர்கள் மறந்தும் கூட திருப்பி தாக்குதல் நடத்தி விடக்கூடாது என்பதாக தான், நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
13வது திருத்தம் என்பது, ஈழத்தமிழர்களின் கண்ணியமான வாழ்வை, அதிகாரத்தை சிறிதும் கூட உறுதிப்படுத்தாது என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது. மாறாக, ஈழத்தமிழர்களின் இறைமையை இழக்க வைக்கும் உத்தியாகவே தமிழக வாழ்வுரிமைக் கட்சி கருதுகிறது.




இச்சூழலில், ஈழத்தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்க,  13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற வார்த்தை  உச்சரிக்கப்பட்டதுமே, சிங்கள புத்த துறவிகளும், அரசியல்வாதிகளும், இது பிரிவினைக்கு வித்து என இனவெறிக் கருத்துக்களையும், சிங்கள பௌத்தமதவெறி முழக்கங்களையும் தொடங்கியுள்ளனர்.கொடுங்கோலன் ராஜபக்சேவை விட, தமிழர் வாழ்வியலை, தொன்மையை சிதைக்கும் நோக்கத்துடன், தமிழர்களின் கோயில்களில் இடித்து அகற்றி விட்டு, பௌத்த விகாரங்களை நிறுவி வரும் புத்த துறவிகளிடம் தான் ஈழத்தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.தமிழர்களின் ரத்தவெறி பிடித்த புத்த துறவிகளும், இராஜபக்சே கும்பலும்,  இந்தியாவும், என்றைக்குமே, ஈழத்தமிழர்களுக்கான உரிமையை பெற்று தராது. உலகெங்கும் வாழும் தமிழர்களும், தமிழ்நாட்டு தமிழர்களும், ஈழத்தமிழர்களும் ஓர் அணியில் நின்று, இறையாண்மையை எடுத்து கூறினால் மட்டுமே, ஈழத்தமிழர்களை பாதுகாக்க முடியும் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி எடுத்துரைக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.