மின் கட்டண உயர்வு, ரேசனில் பருப்பு இல்லை! ஆர்ப்பாட்டம் அறிவித்த தேமுதிக
மின் கட்டண உயர்வையும், ரேஷன் அத்தியாவசிய பொருட்கள் கடந்த சில மாதங்களாக கிடைக்காததாலும், தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும் தேமுதிக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வரும் வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மின் கட்டண உயர்வை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டியும், தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு வகைகள் கடந்த சில மாதங்களாக கிடைக்காததை கண்டித்தும், விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்க காரணமாக இருக்கும் காவிரி நீரை திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய, மாநில அரசு காவேரியில் இருந்து தண்ணீரை உடனடியாக பெற்றுத்தர வேண்டியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், விவசாய பெருமக்கள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் மக்கள் பிரச்சனைக்காக நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


