விஜயகாந்த்துக்கு மணி மண்டபம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளோம் - பிரேமலதா பேட்டி

 
tn

தமிழ்நாடு அரசிடம் விஜயகாந்த்துக்கு மணி மண்டபம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளோம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 

தேமுதிக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று முன்தினம் காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில்  வைக்கப்பட்டது. அங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் மதியம் 2.30 மணிவரை அஞ்சலி செலுத்தினர்.  இதையடுத்து விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன்  72 குண்டுகள் முழங்க கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இந்நிலையில் விஜயகாந்த் உருவப்படத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர். கேப்டன் விஜயகாந்த்தின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கண்ணீர் மல்க சடங்குகளை செய்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், மறைந்த விஜயகாந்த் மறைவிற்கு நேரிலும் தொலைபேசி வழியாகவும் இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் தலைவணங்கி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசிடம் விஜயகாந்த்துக்கு மணி மண்டபம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளோம். நிச்சயம் செய்துகொடுப்பார்கள் என்று நம்புகிறோம். 24 மணி நேரமும் நினைவிடத்தில் பூஜைகள் செய்யப்படும். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தலாம் என கூறினார்.