புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு ஜனாதிபதியை அழைத்து இருக்க வேண்டும் - பிரேமலதா

 
premalatha

புதிய நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் செங்கோல் அமைவது தமிழருக்கு கிடைத்த பெருமை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 

தலைநகர் டெல்லியில் 64ஆயிரத்து 500 சதுர அடியில் , முக்கோண வடிவில், 4 மாடிகளுடன்  அமைக்கப்பட்டுள்ள  புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இதற்காக புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அமைந்துள்ள இடத்திற்கு வந்த பிரதமர் மோடி,  மக்களவை சபாநாயகருடன்  வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜையில் அவர்கள் கலந்துகொண்டனர். குண்டம் வளர்க்கப்பட்டு, ஆச்சாரியார்களை வைத்து பூஜை நடத்தப்பட்டது.  அதேபோல் கிறிஸ்தவம், இஸ்லாமியம், பௌத்தம் உள்ளிட்ட  அனைத்து குருமார்கள் வழிபாடும் நடைபெற்றது.  இதன் தொடர்ச்சியாக சோழர்களின் பொற்காலத்திற்கு சாட்சியாக விளங்கும் செங்கோலை , தமிழக ஆதீனங்கள் 21 பேரும் பிரதமர் மோடியிடம் வழங்கினர்.  அப்போது செங்கோலை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, ஆதீனங்கள் முன்னிலையில் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து ஆசி பெற்றார். அதன்பிறகு,  சபாநாயகர் இருக்கைக்கு அருகில் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் சோழர்கால செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி.  

இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு ஜனாதிபதியை அழைத்து இருக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.  தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்புக்கு வாழ்த்துக்கள். இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாள் இன்று. நல்ல ஒரு விஷயம் நாட்டிற்காக நடந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக ஜனாதிபதியை அழைத்து இருக்க வேண்டும். அந்த நல்ல நிகழ்வை வரவேற்போம். தமிழகத்தில் இருந்து செங்கோல் அங்கு அமைவது ஒட்டு மொத்த தமிழருக்கு கிடைத்த பெருமை. இவ்வாறு அவர் கூறினார்.