“2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வெற்றி பெறும் வரை எங்கள் யாருக்கும் ஓய்வு இல்லை”- பிரேமலதா
தமிழ்நாட்டில் 2026ல் கூட்டணி ஆட்சி தான் அமையும் கூட்டணி குறித்து கடலூர் மாநாட்டில் அறிவிப்போம் என திருப்பூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்துள்ளார்.

திருப்பூரில் தேமுதிக வாக்குச்சாவடி முகவர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜனவரி 9 ல் நடைபெற உள்ள கடலூர் மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பு இருக்கும். கட்சியை பலப்படுத்தி மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கூட்டணி குறித்து முடிவெடுப்போம். செல்லும் இடமெல்லாம் மகத்தான வரவேற்பு உள்ளது. ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது 2026ல் புதிய வகையில் கூட்டணி ஆட்சி அமையவே 100 சதவீத வாய்ப்பு உள்ளது.
ரேஷன் கடையில் தரமில்லாத அரிசி தான் வழங்கப்படுகிறது. இந்த ஆட்சிக்கு 50/50 தான் என மதிப்பெண் கொடுத்துள்ளேன். கூட்டணி மந்திரி சபை அமைந்து தான் ஆட்சி அமையும் என்பது தான் எங்களுக்கு வரும் தகவலாக உள்ளது. வடமாநில மக்கள் அதிக அளவில் திருப்பூரில் உள்ளனர். அதனால் இங்குள்ளவர்கள் வாக்கை எடுத்து விட்டு புதிதாக வந்தவர்களுக்கு வாக்கு வழங்குவது என்பதை தேமுதிக எதிர்க்கிறது. எங்கு பிறந்தார்களோ அங்கு தான் அவர்களுக்கு வாக்கு இருக்க வேண்டும். செங்கோட்டையன், தவெக, அதிமுக உட்கட்சி குறித்து நோ கமெண்ட்ஸ். ஸ்டாலின், விஜய் தளபதி பட்டம் குறித்த கேள்விக்கு நாட்டுக்காக ராணுவத்தில் எல்லையில் உள்ளவர்கள் தான் உண்மையான இந்தியாவின் தளபதி” என்றார்.


