“அதிமுக, திமுக என இரண்டு பக்கமும் தேமுதிக பேசுகிறதா? ஆட்சியில் பங்கு வேண்டும்”- பிரேமலதா விஜயகாந்த்
நாங்கள் கூலாக இருக்கிறோம், மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்கள் தொண்டர்கள், நிர்வாகிகள் நினைக்கின்ற கூட்டணியை அமைப்போம். கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்துள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொடி நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 118 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி, உறுதி மொழி எடுத்துக்கொண்டார். தொடர்ந்து விஜயகாந்த் நினைவிடம் சென்று தேர்தலில் போட்டியிட உள்ள விருப்ப மனுவை வைத்து பூஜை செய்தார். தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் விஜய பிரபாகரன் போட்டியிட விருப்பமனுவை தேமுதிக பொருளாளர் எல்கே சுதிஷிடம் அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிகவின் 26 ஆம் ஆண்டு கொடிநாள் விழா தலைமை கழகத்திலும் கேப்டன் வீட்டிலும் தமிழ்நாடு முழுக்க இருக்கின்ற மாவட்ட கழக செயலாளர் அனைத்து ஒன்றிய நகர பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் தமிழக முழுவதும் இன்றைக்கு கேப்டனால் அறிமுகப்படுத்தப்பட்ட எங்கள் மூவர்ண கொடி பட்டொலி வீசி பறக்கிறது. இந்த நல்ல நாளில் கேப்டன் பெயரில் நாங்கள் முதல் விருப்பமனு கொடுத்திருக்கிறோம். இதே நாளில் தான் 2011 ஆம் ஆண்டு கேப்டன் அவர்கள் அவருடைய விருப்ப மனுவை கொடுத்தார். இரண்டாவது நானும், மூன்றாவது விஜய பிரபாகரனும் கொடுத்திருக்கிறோம். 2026 தேர்தல் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றி கூட்டணியாக இருக்கும். நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிச்சாமி சொன்ன பதில்களை நீங்கள் கேட்டீர்கள். எ.வ வேலு அவர்களும் நாங்கள் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என்று சொல்லும்பொழுது பத்திரிக்கையாளர்களுக்கு யார் சொன்னது இரண்டு பக்கமும் பேசுகிறோம் என்று? பொய்யான, தவறான செய்தியை யார் சொல்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை.
எப்போது கூட்டணி என்ற கேள்வியை கேட்க வேண்டியது எங்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள், நிர்வாகிகள் தான். அவர்கள் கூலாக இருக்கிறார்கள், மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நம்பிக்கையாக இருக்கிறார்கள். தேமுதிக எப்படிப்பட்ட கட்சி என்பதை தமிழக மக்கள் அறிவார்கள் மக்களும் அறிவார்கள். அந்த கருத்தை சொன்னவர் எப்படிப்பட்டவர் என்று மக்களுக்கு தெரியும். தேமுதிக கண்ணியமான கட்சி கேப்டனால் உருவாக்கப்பட்ட கட்சி. யாருடைய கருத்தும் எங்களை எந்த விதத்திலும் பாதிக்காது. மடியில் கனமில்லை வழியில் பயமில்லை. நாங்கள் அனைவரும் மீதும் மரியாதை வைத்திருக்கிறோம். ஆட்சியில் பங்கு அமைந்தால் நல்லது தான் என்பது தான் என்னுடைய கருத்து. கூட்டணி ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் ஒரு மாற்றம் இருக்கும். மக்கள் எடுக்கும் முடிவு தான் இதற்கான முடிவாக இருக்கும்” என்றார்.

