யானைகளுக்கு உணவளித்த பிரதமர் மோடி.. பொம்மன் - பெள்ளி தம்பத்திக்கு பாராட்டு..
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வந்த பிரதமர் மோடி, அங்குள்ள வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கினார்.
சென்னையில் நேற்று ரூ. 5000 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு இரவில் தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மைசூருக்குச் சென்று தங்கினார். பின்னர் பிரதமர் மோடி இன்று ( 9ம் தேதி ) நீலகிரி மாவட்டம் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிடார். கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு வந்த அவர் பந்திப்பூர் வனப்பகுதி, புலிகள் சரணாலயத்தை சுற்றிப் பார்த்தார்.
பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் வாகன சவாரி மேற்கொண்ட பிரதமர் மோடி, நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு புறப்பட்டார். பந்திப்பூர் வனப்பகுதியில் 22 கி.மீ. தூரம் பிரதமர் மோடி சாலை மார்க்கமாக பயணம் செய்து, முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வந்தார். இதனையொட்டி நேற்று மாலை முதல் பந்திப்பூர் வழியாக செல்லும் அனைத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. முதுமலையில் கரிலிருந்து இறங்கிய பிரதமர் மோடி, அங்கு சாலையோரம் குவிந்திருத்த பாஜக் தொண்டர்கள், பொதுமக்களை பார்த்து கையசைத்தார்.
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு, முகாமில் இருந்த 22 வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை உயர்த்தி பிளிரி வரவேற்பு அளித்தன. அப்போது யானைகளுக்கு கரும்பை உணவாக அளித்த பிரதமர் மோடி, அவற்றை தடவிக்கொடுத்து மகிழ்ந்தார். புலிகள் காப்பகத்தை பார்வையிட்ட அவர், பின்னர் யானை பாகன்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். . தொடர்ந்து ஆஸ்கர் விருது பெற்ற ‘The Elephant Wishperers' ஆவணப்படத்தில் நடித்த பொம்மன் -பெள்ளி தம்பதியை சந்தித்து பாராட்டு தெரிவித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அதன்பின்னர், கார்மூலமாக தெப்பக்காட்டிலிருந்து மசினகுடி சென்று, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மீண்டும் மைசூர் புறப்பட்டார்.