2 நாள் தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டார் பிரதமர் மோடி..
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வந்த பிரதமர் மோடி, 2 நாள் தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு மைசூருக்கு புறப்பட்டார்.
பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார். புதிய விமான நிலைய முனையம், சென்னை -கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட ரூ. 5000 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு இரவில் தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மைசூருக்குச் சென்று அங்குள்ள நட்சத்திர விடுதியில் தங்கினார். பின்னர் பிரதமர் மோடி இன்று ( 9ம் தேதி ) நீலகிரி மாவட்டம் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிட்டார். கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக இன்று காலை 9.30 மணிக்கு பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு வந்த அவர் பந்திப்பூர் வனப்பகுதி, புலிகள் சரணாலயத்தை சுற்றிப் பார்த்தார்.
பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் வாகன சவாரி மேற்கொண்ட பிரதமர் மோடி, நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு புறப்பட்டார். பந்திப்பூர் வனப்பகுதியில் 22 கி.மீ. தூரம் பிரதமர் மோடி சாலை மார்க்கமாக பயணம் செய்து, முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு, முகாமில் இருந்த 22 வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை உயர்த்தி பிளிரி வரவேற்பு அளித்தன. அப்போது யானைகளுக்கு கரும்பை உணவாக அளித்தார் பிரதமர் மோடி. புலிகள் காப்பகத்தை பார்வையிட்ட அவர், பின்னர் யானை பாகன்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
தொடர்ந்து ஆஸ்கர் விருது பெற்ற ‘The Elephant Wishperers' ஆவணப்படத்தில் நடித்த பொம்மன் -பெள்ளி தம்பதியை சந்தித்து பாராட்டு தெரிவித்து அவர்களுடன் கலந்துரையாடினார். யானைகள் வளர்ப்பு குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின்னர், 2 நாள் தமிழக பயணத்தை முடித்துக்கொண்டு கார்மூலமாக தெப்பக்காட்டிலிருந்து மசினகுடி சென்று, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மீண்டும் மைசூர் புறப்பட்டார். முன்னதாக பிரதமர் வருகையை ஒட்டி நேற்று மாலை முதல் பந்திப்பூர் வழியாக செல்லும் அனைத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் 3 நாட்களாக பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சுமார் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈருபட்டிருந்தனர்.