அதிகாரமிக்க, கருணையற்ற, கொடூர வில்லன் கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்துள்ளார் பிருத்விராஜ் : எஸ்.எஸ்.ராஜமௌலி நெகிழ்ச்சி..!
RRR படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் தொன்மக் கதையாக உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் குறித்து அப்டேட்களுக்கு ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
படக்குழுவின் தகவலின்படி, ‘எஸ்.எஸ்.எம்.பி 29’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ நவம்பர் 15-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. இந்த மாபெரும் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.அதே நேரத்தில், இந்த நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை (Live Streaming) செய்யும் உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்துக்கு ‘ஜென்63 (GEN63)’ மற்றும் ‘வாரணாசி (Varanasi)’ எனும் தலைப்புகள் பரிசீலனையில் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், உலக அழகி நடிகை பிரியங்கா சோப்ரா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வில்லன் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடித்துள்ளார். இது குறித்து ராஜமௌலி தனது பதிவில் கூறியதாவது: பிருத்வியுடனான முதல் ஷாட்டினை எடுத்த பிறகு அவரிடம் சென்று, நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த நடிகர் நீங்கள்தான் எனக் கூறினேன். கும்பா எனப்படும் அதிகாரமிக்க, கருணையற்ற, கொடூரமான வில்லன் கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்துள்ளார். மிகவும் திருப்தியான உணர்வு. இந்தப் படத்தில் இணைந்ததுக்கு நன்றி பிருத்விராஜ் எனக் கூறியுள்ளார்.


