தனியார் ஆம்னி பேருந்து கட்டண கொள்ளை - உரிய நடவடிக்கை தேவை!!

 
vijayakanth

கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் விடுமுறை நாட்களில் தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்படுகிறது. கடந்த வாரம்  கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை,  மிலாடி நபி, வார இறுதி நாட்கள் மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்பிய போது தனியார் பேருந்துகளில் டிக்கெட்  கட்டணம் பல மடங்கு வசூலிக்கப்பட்டதால் கடும் அவதியடைந்தனர். 

Erode Bus Stop


விடுமுறை நாட்களில் தமிழக அரசு சார்பில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் தனியார் பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன. மேலும்  அரசு பேருந்துகள் தரம் இல்லாததால் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பு கருதி தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர். இதனை பயன்படுத்தி  விமான கட்டணத்திற்கு சமமாக தனியார் பேருந்துகளில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.  

bus

தனியார் பேருந்துகளில் நடைபெறும் கட்டண கொள்ளையை  தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்து தனியார் பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.  மேலும் கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையில் இருந்து சாமானிய மக்களை காப்பாற்ற வேண்டியது தமிழக அரசின் கடமை." என்று குறிப்பிட்டுள்ளார்.