சூலூரில் தனியார் பள்ளி வாகனம் விபத்து..!

 
1

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டணம் பகுதியில் இன்று (மார்ச்.26) காலை பள்ளி மாணவர்களை ஏற்றி செல்ல வந்த தனியார் பள்ளி வாகனம், பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 6 மாணவ மாணவியர்கள் சிக்கினர். அதில் இரண்டு குழந்தைகளுக்கு பலத்த காயமும், 4 குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ளவர்கள் குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை சூலூர் அடுத்த நீலாம்பூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலை அப்பள்ளி வாகனம் வழக்கம்போல பட்டணம் பகுதியில் உள்ள 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு, நாகம்மநாயக்கன்பாளையம் வழியாக ஜே.ஜே நகரில் மாணவ மாணவிகளை ஏற்றுவதற்காக சென்று கொண்டிருந்தது.

அப்போது ஜே.ஜே நகர் செல்லும் 30 அடி அகல மண் சாலையில் சென்று கொண்டிருந்தபோது  எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஓட்டுநர் சாலை வலது புறமாக வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார்.

எதிர்பாராத விதமாக சாலையின் பக்கவாட்டில் மண் சரிந்ததால் பள்ளி வாகனம் 7 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அனைவரையும் மீட்டனர். இந்த விபத்தில் மாணவர் ஒருவருக்கும் மாணவி ஒருவருக்கும் காயங்கள்  ஏற்பட்டது.

பின்னர் இருவரும் சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் அங்கிருந்த கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.