ஜூன் 13 பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு..
தமிழகம் முழுவதும் வருகிற 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் பள்ளி பேருந்துகளில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் பெரும்பாலும், மாணவர்களுக்கான போர்க்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதற்காக பயன்படுத்தப்படும் பள்ளிகளுக்குச் சொந்தமான வேன் மற்றும் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா??, பேருந்தில் அனைத்து வசதிகளும் இருக்கின்றனவா?? இருக்கைகள் சரியாக இருக்கிறதா?? என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிகள் வருகின்ற 13 ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் அதிகாரிகள் தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், செங்கல்பட்டு வட்டார போக்குவரத்துக்குட்பட்ட செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 40க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த 40 பள்ளிகளுக்குச் சொந்தமான சுமார் 220-க்கும் மேற்பட்ட வேன் மற்றும் பேருந்துகள் அரசினர் தொழிற்பயிற்சி மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டு சோதனை செய்யப்பட்டன. துணை ஆட்சியர் சஞ்சீவனா உள்ளிட்ட அதிகாரிகள் ஒவ்வொரு பேருந்துகளாக சென்று சோதனை செய்தனர். பள்ளி வாகனத்தை இயக்கும் ஓட்டுநர், முறையாக உரிமம் பெற்றுள்ளாரா? குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவரா? எனவும் அவர்களிடம் விசாரித்தனர். பேருந்து மற்றும் வேன்களில் இருக்கைகள், மேல் கூரை உறுதியாக இருக்கிறதா?, வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? , அவசரகால வழி உள்ளதா? , முதலுதவி சிகிச்சை பெட்டி வைக்கப்பட்டுள்ளதாக என்று ஆய்வு மேற்கொண்டனர்.
முக்கியமாக ஒவ்வொரு பேருந்துகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். அத்துடன் பள்ளி வாகனங்கள் விபத்துக்குள்ளானால் ஓட்டுநர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும், தீயை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் மூலம் ஓட்டுநர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் பழைய வாகனங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதற்கான உரிய சான்று பெற்று அதன் பிறகே மாணவர்களை வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் , தனியார் பள்ளிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.