சாவிலும் இணை பிரியா தம்பதி!!

 
1

ஜெயங்கொண்டம் அடுத்து உள்ள கல்லாத்தூர் வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூக்கன் என்கிற முத்தையன் (78). இவரது மனைவி குப்பாயி (70). இந்த தம்பதிக்கு 4 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனால் முத்தையனும், குப்பாயியும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் மிகுந்த பாசத்துடன் இருந்து வந்தனர்.

dead-body

வயது மூப்பு காரணமாக அவர்கள் 2 பேரும் நோய்வாய்ப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகவும், குப்பாயிக்கு சரியாக காது கேட்காது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் முத்தையன் நேற்று திடீரென இறந்தார். ஆனால் இதுகுறித்து குப்பாயிக்கு தெரியவில்லை. இருப்பினும் முத்தையன் இறந்ததை அறிந்த உறவினர்கள், அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது மேளம் அடித்ததையும், உறவினர்கள் அழுது கொண்டிருந்ததையும் பார்த்து சந்தேகமடைந்த குப்பாயி அருகில் இருந்தவர்களிடம் விவரம் கேட்டார். அப்போது முத்தையன் இறந்தது குறித்து அவரிடம் கூறியுள்ளனர். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குப்பாயி, கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மார்பில் அடித்துக் கொண்டு கதறி அழுதார்.

Jayankondam

அப்போது முத்தையன் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகில் குப்பாயி திடீரென மயங்கி கீழே விழுந்தார். உறவினர்கள் அருகில் சென்று பார்த்தபோது குப்பாயி இறந்துவிட்டது தெரியவந்தது. இதனால் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து அவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. வாழும்போது ஒற்றுமையாக வாழ்ந்த தம்பதி சாவிலும் இணைபிரியாத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.