தயாரிப்பாளர் சங்கம் Vs ஃபெப்சி பிரச்சனை: ஓய்வுபெற்ற நீதிபதி மத்தியஸ்தராக நியமனம்..
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஃபெப்சி இடையேயான பிரச்னைகளுக்கு தீர்வு காண ஓய்வு பெற்ற நீதிபதியை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் ஃபெப்சிக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய சங்கத்தை துவங்கி இருப்பதாக கூறி, பெப்சி குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் ஃபெப்சி அமைப்பின் உறுப்பினர்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும், ஒத்துழைப்பு வழங்க கூடாது என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி பெப்சி கடிதம் அனுப்பி இருந்தது. இதனால் படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணா, ஒருவரை ஒருவர் சார்ந்துள்ள நிலையில் ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்களின் ஒத்துழையாமை முடிவால் சினிமா தயாரிப்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ஃபெப்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.மோகன கிருஷ்ணன், இரு சங்கங்கள் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2025 மார்ச் மாதத்துடன் முடிந்து விட்டதால், அவர்களுடன் பணியாற்றுமாறு தங்களை கட்டாயப்படுத்த முடியாது என தெரிவித்தார். மேலும், குறைந்த ஊதியத்திற்கு அதிக நேரம் தங்களது சங்கத்தை சேர்ந்தவர்கள் வேலை வாங்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்னைகளை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, கடந்த 30ம் தேதி விசாரணையின்போது இரு சங்கங்கள் இடையேயான பிரச்னையை பேசி தீர்ப்பதற்கு ஏன் மத்தியஸ்தரை நியமிக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதி, யாரை மத்தியஸ்தராக நியமிக்கலாம் என கலந்தாலோசித்து தெரிவிக்க வேண்டும் என இரு தரப்புக்கும் உத்தரவிட்டார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமிக்கலாம் என இருதரப்பிலும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
இதனையேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஃபெப்சி இடையேயான பிரச்னைகளுக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து, நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவிட்டார். அப்போது திரைப்பட தயாரிப்புக்கு இடையூறு இல்லாமல் ஒத்துழைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு ஃபெப்சி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டபிறகு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.


