கோவையில் பைக் டாக்ஸியை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பைக் டாக்ஸியை தடை செய்யக் கோரி சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் வாக்காளர் அடையாள அட்டையை திருப்பி கொடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக இயக்கப்பட்டு வரும் பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும், சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்த அனுமதிக்க கூடாது, உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் கோவை ஆட்சியர் அலுவலம் அருகே கையில் பதாகைகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஓட்டுநர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் தங்கள் வாழ்வாதரத்திற்கு காக்க வலியுறுத்தி, வாக்காளர் அடையாள அட்டைகளை திருப்பி வழங்க உள்ளதாக தெரிவித்தனர். இதே போல 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் குடும்பத்துடன் வாக்காளர் அடையாள அட்டையை அரசிடமே வழங்குவோம் என தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய டாக்ஸி ஓட்டுநர் கூறும் போது : தமிழகத்தில் இயக்கப்படும் சட்ட விரோத பைக் டேக்ஸியால் நாள் தோறும் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. மற்ற மாநில அரசுகள் பைக் டாக்ஸியை தடை செய்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு மட்டும் தடை செய்ய மறுக்கிறது. மேலும் பைக் டாக்ஸியால் எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யவில்லை என்றால் சங்கத்தில் உள்ள 2 ஆயிரம் ஓட்டுநர்களுக்கு ஓட்டுரிமை வேண்டாம், வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப வழங்குவோம் என தெரிவித்தனர்.


