மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி மறுத்த ஒன்றிய அரசி கண்டித்து ஆர்ப்பாட்டம்
கோவை - மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி மறுத்த ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து நவ.20 கோவையிலும், நவ.21 மதுரையிலும் காலை 10 மணிக்கு “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பாரபட்சம் - மாணவர்களின் கல்வி நிதியைக் கூட ஒதுக்க மறுப்பது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் ஒன்றிய பாஜக அரசு தற்போது கோவை - மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களையும் முடக்கி வஞ்சித்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கோடு செயலாற்றி வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி‘களின் சார்பில் 20.11.2025 வியாழக்கிழமை கோவையிலும் - 21.11.2025 வெள்ளிக்கிழமை மதுரையிலும் காலை 10.00 மணிக்கு “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.


