திடீரென உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம்! மக்கள் அதிர்ச்சி
Dec 20, 2024, 15:00 IST1734687037000
புதுச்சேரியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி போக்குவரத்து துறை கூடுதல் செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார். முதல்வர் ரங்கசாமி அறிவிப்பிற்கு பிறகு, புதிய கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. தற்போது வரை பழைய கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதிகப்பட்ச கட்டணம் 13ல் இருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதிகரிக்கப்பட்ட கட்டண விபரம்:
- ஏ.சி., வசதி இல்லாத டவுன் பஸ்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 5ல் இருந்து 7 ரூபாய் ஆகவும், அதிகப்பட்ச கட்டணம் 13ல் இருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது குறைந்த பட்சம் 2 ரூபாய், அதிகபட்சம் 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
- ஏ.சி., டவுன் பஸ் குறைந்தபட்ச கட்டணம் 10ல் இருந்து 13 ஆகவும், அதிகப்பட்ச கட்டணம் 26ல் இருந்து 34 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது குறைந்தபட்சம் 3ம், அதிகப்பட்சம் 8 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- டீலக்ஸ் நான் ஏ.சி., பஸ்களுக்கு, ஏ.சி., டவுன் பஸ்களுக்கான கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் டீலக்ஸ் ஏ.சி., பஸ்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 12ல் இருந்து 16 ஆகவும், அதிகபட்ச கட்டணம் 36ல் இருந்த 47 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- ஏ.சி.. அல்லாத எக்ஸ்பிரஸ் பஸ்கள் புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ.,க்கு 0.75 பைசா என்பது 0.98 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. 25 கி.மீ., வரை 20 என, இருந்த குறைந்தபட்ச கட்டணம் 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- ஏ.சி., எக்ஸ்பிரஸ் பஸ்கள் புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ., 1.30 என்பது தற்போது ரூ.1.69 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதல் 25 கி.மீ., 50 ரூபாய் வசூலிக்கலாம்.
- புதுச்சேரி நகர பகுதிக்குள் ஏ.சி., வால்வோ பஸ் கி.மீ.,க்கு 1.70 என்பது தற்போது 2.21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, முதல் 30 கி.மீ.,க்கு 54 ஆக இருந்த கட்டணம் தற்போது 70 ரூபாயாக உயர்ந்துள்ளது.


