அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் கரையைக் கடக்கும் போது பெய்த கடுமையான மழையால் தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

புதுச்சேரியில் வீடுகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் உணவுப் பொருட்களும், பாத்திரங்களும் தண்ணீரில் மிதக்கின்றன. கனமழை பெய்த போது உடுத்திய உடையுடன் வெளியேறிய மக்கள் எந்த பொருளையும் எடுக்க முடியவில்லை என வேதனை தெரிவித்தனர். கூலி வேலைக்குச் சென்று வாழ்க்கை நடத்தி வரும் தங்களுக்கு அடுத்த வேலை உணவுக்கு இந்த மழை, வெள்ளம் சிரமத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர்கள் கூறினர். வாகனங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன
இந்நிலையில் புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் ஹெக்டேருக்கு ரூ.30,000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் கால்நடைகளை பொறுத்தவரை, மாடு உயிரிழந்திருந்தால் ரூ.40,000, இளங்கன்று உயிரிழந்திருந்தால் ரூ.30,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உயிரிழப்புகளை பொறுத்தவரை 4 பேர் கொண்ட குடும்பத்தில் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் அக்குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் மழையால் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.20,000 மற்ற வீடுகளுக்கு ரூ.10,000 படகு சேதமடைந்திருந்தால் ரூ.10,000 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.


