புதுச்சேரி: “போக்குவரத்து ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்பனும்..” - எஸ்மா சட்டம் பாயும் என எச்சரிக்கை..!
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்ததை கைவிட்டு உடனே பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும் என மேலாண் இயக்குநர் சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில்(பி.ஆர்.டி.சி) பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், நிரந்தர ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டம் 11வது நாளாக நீடித்து வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்ததை கைவிட்டு உடனே பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும் என மேலாண் இயக்குநர் சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “புதுச்சேரி அரசு சாலை போக்குவர்த்துக் கழக விதிகளின்படி குறைந்தபட்ச ஊதிய கொள்கைகளை முறையாக அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.8ஆயிரத்திலுருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிநிரந்தரம் வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புக்கு எதிராக கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
கடந்த 28ம் தேதியிலிருந்து 11 நாட்களாக ஒப்பந்த விதிகளை மீறி தொடர்ந்து சட்டவிரோதமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தின் ஒப்பந்த உடன்படிக்கை மற்றும் கொள்கையின்படி, முன் அனுமதியின்றி தொடர்ந்து 8 நாட்களுக்கு மேல் பணிக்கு வராத ஊழியர்களின் மீது பணி நீக்கம் போன்ற ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். மீறினால் எந்தவித முன்னறிவிப்பும் இனி பணி நீக்கும் ‘எஸ்மா’ சட்டப்படி நடவடிக்கை பாயும் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


