“எடப்பாடியால் சாதனை மலர் அல்ல... வேதனை மலர்தான் வெளியிட முடியும்” - அமைச்சர் ரகுபதி விமர்சனம்
எடப்பாடி பழனிசாமி பாஜகவை மதவாத கட்சி இல்லை என்று ஏற்றுக்கொண்டால் அதுபோல் ஒரு துரோகம் ஒன்றுமே கிடையாது. அவர் கூட்டணி வேண்டுமென்றால் வைத்துக் கொள்ளலாமே தவிர பாஜகவிற்கு வக்காலத்து வாங்குவதற்காக பாஜக மதவாத கட்சியே இல்லை என்று கூறுவது பச்சை பொய் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த நான்காண்டு சாதனை மலரை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் வெளியிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “எடப்பாடி பழனிச்சாமி வேதனை மலர்தான் வெளியிட முடியும் சாதனை மலர் வெளியிட முடியாது. நாங்கள் கொண்டு வந்த அத்தனை திட்டமும் புதிய திட்டம். இதற்கு ஒன்றுக்காவது அவர் பிள்ளையார் சுழி போட்டிருந்தால் கூட உரிமை கொண்டாடலாம். நாங்கள் கொண்டு வந்த அனைத்து திட்டமும் புதிய திட்டங்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிந்தனையில் உதித்த திட்டங்கள். இதற்கு அவர் உரிமை கொண்டாட முடியாத காரணத்தினால் எங்கள் ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டார்கள் என்று கூறுகிறாரே தவிர நாங்கள் கொண்டு வந்த திட்டங்களுக்கு இணையாக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. அதற்கான ஆயத்தப் பணிகளை கூட அவர் செய்யவில்லை.
ஓபிஎஸ், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். கூட்டணியை பற்றி ஆரம்பத்தில் சொல்லிவிட முடியாது. எதைப்பற்றியும் முடிவு செய்கின்ற உரிமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டும்தான் உண்டு. அவர் உரிய நேரத்தில் முடிவு செய்து அறிவிப்பார். கூட்டணியில் எந்த கணக்கை போட்டால் வெற்றி பெற முடியும் என்ற கணக்குத் தெரிந்தவர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின். அதனால் அவர் போடுகின்ற கணக்கு தப்புக்கணக்காக இருக்காது. வெற்றிக் கணக்காக இருக்கும். கூட்டணிக்குள் புதிய கட்சிகள் வரும்பொழுது இட பங்கீடு பிரச்சனை வந்தால் அது அப்போது பார்த்துக் கொள்ளலாம். அதற்கான வழியை தமிழ்நாடு முதலமைச்சர் வைத்திருப்பார். தற்போதைய சந்திப்பு மரியாதை நிமித்தமானது.

எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை மதவாத கட்சி இல்லை என்று ஏற்றுக்கொண்டால் அதுபோல் ஒரு துரோகம் ஒன்றுமே கிடையாது. அவர் கூட்டணி வேண்டுமென்றால் வைத்துக் கொள்ளலாமே தவிர பாஜகவிற்கு வக்காலத்து வாங்குவதற்காக பாஜக மதவாத கட்சியே இல்லை என்று கூறுவது பச்சை பொய். வெளிமாநிலத்தவர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவது குறித்து தேர்தல் ஆணையத்தில் அதற்கான தகுந்த முறையீடுகளை நாங்கள் எடுத்து வைப்போம். யார் எங்கே வாக்களிக்க வேண்டும் என்ற உரிமையும் இருக்கிறது. அதற்காக வெளிமாநிலத்தில் இருந்து வாக்காளர்களை இறக்குமதி செய்வதை நிச்சயமாக தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. தமிழ்நாட்டின் வாக்காளர்களுடைய மனநிலை வேறு,பீகார் மாநிலத்தின் வாக்காளர்களின் மனநிலை வேறு ஆக இருக்கக்கூடிய சூழல் இருக்கிறது. அதனால் அதைப் பற்றி அந்த நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தில் உரிய முறையில் கொண்டு செல்வார்” என்றார்.


