“பிரதமரின் நாற்காலி ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது”- பகீர் கிளப்பும் புகழேந்தி
அம்மா உணவகம் மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு புகழேந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி இன்று தன்னுடைய பிறந்தநாளை ஒசூரில் உள்ள அம்மா உணவகத்தில் ஏழைகளோடு உணவருந்தி கொண்டாடினார். பின்னர் செய்தியாளிடம் பேசிய புகழேந்தி, “மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த அம்மா உணவகத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் தற்போது, அம்மா உணவகத்திற்கு தேவையான உணவு பாத்திரங்கள் மற்றும் சிறப்பான முறையில் நடத்திட மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ரூபாய் 21 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இதை வரவேற்கிறேன். ஏழை, எளியோர் சாப்பிடும் உணவிற்கு உதவி செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தன்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
கடந்த காமராஜ் பிறந்தநாளிலும் இதே போல் காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவு படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டுக்கள். திமுக 40 இடங்களை வெற்றி பெற்றாலும் ஒன்றும் செய்ய இயலாது என பாஜகவினர் கிண்டல் அடித்து வருகின்றனர். ஒன்றிய அரசின் பாரத பிரதமரின் நாற்காலி ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது கூட்டணி கட்சிகள் கேட்காவிட்டாலும் பிரதமர் செய்துதான் ஆக வேண்டும். நித்திஷ் குமாரும், சந்திரபாபு நாயுடு எப்போது நாற்காலியை ஆட்டுவார்கள் என்பது அவர்களுக்குத் தான் தெரியும். பிரதமரின் நாற்காலி நிரந்தரமான நாற்காலி இல்லை, அதனால்தான் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட தலைவர்கள் பெரும்பாலும் சட்ட புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டுள்ளார்கள்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவேன் என்று துடித்த பிரதமர் மோடிக்கு கிடைத்த நீதி தான் முடிந்த தேர்தல் முடிவு. எதிர்க்கட்சிகள் வலுப்பெற்று உள்ளது, ஜனநாயகம் தலைத்தோங்கி உள்ளது” என்றார்.