“வீட்டில் அமர்ந்து கொண்டு அறிக்கை... ”- அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த புஸ்ஸி ஆனந்த்

 
க்ஷ் க்ஷ்

அண்ணாமலைக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை மக்களுக்கு சேவை செய்வது தான் எங்கள் நோக்கம் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் பேட்டியளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற 28 ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் மையத்தில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் பொதுக்குழு நடைபெற உள்ள ராமச்சந்திரா மண்டபத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல்  பிரச்சார மேலாண்மை பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜுனா, விஜய்யின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் விஜய்யின் துபாய் தனியார் பாதுகாவலர்கள் உடன் விஜய் வந்து செல்லும் வழி,நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை,உணவு தயார் செய்யும் மற்றும் பரிமாறும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பொதுக்குழு கூட்டத்தை எப்படி நடத்துவது என ஆலோசனை மேற்கொண்டனர்.  


ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் ஆனந்த், “வருகிற 28 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தலைமையில் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள். எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள் என பின்பு தெரிவிக்கப்படும். சிறப்பு அழைப்பாளர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை, கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே கலந்துக் கொள்ள உள்ளனர் என்றார். வீட்டில் அமர்ந்து கொண்டு அறிக்கை விடக்கூடாது என அண்ணாமலை விமர்சிக்கிறார். யார் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும்,நாங்கள் தலைவர் விஜய் வழியில் அவரது அறிவுறுத்தல் படி மக்கள் சேவை செய்வது தான் எங்கள் நோக்கம். அண்ணாமலை கருத்துக்கு எல்லாம் நான் பதில் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.