"எல்லாம் மக்கள் கையில்" - ஊரடங்கு குறித்து ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சூசகம்!
மாநிலம் முழுவதும் நேற்று 50 ஆயிரம் இடங்களில் 13ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் நடந்த முகாமை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒமைக்ரான் கொரோனா குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். ஆனால் அதை தடுக்க 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம். மாஸ்க் அணிந்து தனி மனித விலகலை அனைவரும் பின்பற்ற வேண்டியதும் அவசியம்.
கொரோனாவில் டெல்டா வகைதான் உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த டெல்டாவை விட ஒமைக்ரான் ஆபத்தானது என சொல்லப்படுகிறது. ஒமைக்ரான் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வந்த 12 ஆயிரத்து 188 பேருக்கு சோதனை செய்ததில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் 3 பேரும் தற்போது நலமாக உள்ளனர். அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்க வாய்ப்பு குறைவு என மருத்துவ ரீதியாக தெரியவந்துள்ளது.
ஒமைக்ரான் தொற்று உள்ளதா என சந்தேகம் உள்ளோரின் மாதிரிகளை நாங்களும் பரிசோதனை செய்கிறோம். மத்திய வைராலஜி ஆய்வு கூடத்துக்கும் அனுப்பி வருகிறோம். மூன்றாம் அலை வந்தாலும், வராவிட்டாலும் தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. மக்கள் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடித்தால் ஊரடங்கு தேவையில்லை. தற்போது தமிழ்நாட்டில் ஊரடங்கை அமல்படுத்தும் சூழல் இல்லை என்றாலும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது பற்றி உலக சுகாதார நிறுவனத்தின்அறிவுறுத்தல்களை பொருத்து முடிவு செய்யப்படும்” என்றார்.