"தமிழகத்தில் ஒமைக்ரான் அதிகம் பரவ வாய்ப்பு" - ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் ஷாக் தகவல்!
உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது ஒமைக்ரான். ஒரே மாதத்தில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பரவியுள்ளது. ஒரேயொரு நல்லது என்னவென்றால் டெல்டா போல ஒமைக்ரான் ஆட்டிப் படைப்பதில்லை. அதன் வீரியம் ஜாஸ்தி இல்லை. வீட்டிலிருந்தபடியே அதிலிருந்து குணமடைந்துவிடலாம். ஆனால் விஷயம் அதுவல்ல. இரட்டைக் குழல் துப்பாக்கியாக டெல்டாவும் ஒமைக்ரானும் சேர்ந்து பரவுகின்றன. இதனால் தொற்று எண்ணிக்கை எதிர்பாரா விதமாக உயர்கின்றன. அமெரிக்காவில் தினசரி 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவிலும் சும்மா இல்லை. படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது கொரோனா பாதிப்பு. ஒமைக்ரான் பாதிப்பு ஆயிரத்தை நெருங்கிறது. மொத்த பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தை கடந்து செல்கிறது. மும்பையில் 3ஆம் அலை தொடங்கிவிட்டது. சென்னையில் கடந்த 10 நாட்களில் படிப்படியாக ஏறிக் கொண்டிருக்கிறது. இதனால் அங்கே கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய சுகாதார துறை அறிவுறுத்தியிருந்தது. இச்சூழலில் நேற்று தமிழ்நாடு முழுமைக்குமே கட்டுப்பாடுகளை அதிகரித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
1 முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் கிடையாது. திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. திருமணம், துக்க நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி. பொது போக்குவரத்தில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. இதுகுறித்து பேசியுள்ள மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், "தமிழகத்தில் ஒமைக்ரான் பரவ அதிக வாய்ப்பு உள்ளதால் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதனால்தான் அதிக தளர்வுகள் அளிக்க தமிழக அரசு விரும்பவில்லை. ஒமைக்ரான் பாதித்தவர்களில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா கவனிப்பு மையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றார்.