நியோகோவ் வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா? தடுப்பூசி அவசியம்- ராதாகிருஷ்ணன்
தமிழகம் முழுவதும் இன்று 20ஆவது மெகா தடுப்பூசி முகாம் நிறைவு பெற்ற நிலையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்தொற்று குறைய தொடங்கியுள்ளது இருப்பினும் தொற்றின் எண்ணிக்கை குறைவதால் மக்கள் அலட்சியம் காட்டுதல் கூடாது. தொடர்ந்து அடுத்த இரண்டு மூன்று வாரங்களுக்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் இதுவரை 2,711 ஊராட்சிகளிலும், 24 நகராட்சிகளிலும் 100 விழுக்காடு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. Neocovஎன்ற புதிய வைரஸ் பற்றிய தவறான தகவல்களை பொதுமக்கள் நம்பி அச்சம் அடைய வேண்டாம். உலக சுகாதார துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.
இன்று நடைபெற்ற 20-ஆவது மெகா தடுப்பூசி முகாமில் 10.17 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 2.55 லட்சம் நபர்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 7.27 லட்சம் நபர்களுக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு 90 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செய்யப்பட்டுள்ளது. 68 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 77 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,711 ஊராட்சிகளிலும் 24 நகராட்சிகளிலும் 100 விழுக்காடு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, மயிலாடுதுறை திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் நோய்த்தொற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனினும் அடுத்த இரண்டு மூன்று வாரங்களில் நோய்த்தொற்றின் வேகம் குறையத் தொடங்கும்.
மகாராஷ்டிராவில் ஏற்றம் தொடங்கிய மூன்றாவது வாரத்திற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்று குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் இறப்பு விகிதம் குறைந்து உள்ளது. நோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 5 சதவீதம் மட்டுமே மருத்துவமனைக்கு செல்கின்றனர். ஜனவரி 1 முதல் ஜனவரி 29 வரை 730 பேர் நோய்த்தொற்றால் இறந்து உள்ளனர். அதில் 435 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், மேலும் 60 பேர் முதல் தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தியவர்கள். இறந்தவர்களில் 90 சதவீதம் பேர் இணை நோய் உள்ளவர்கள். தற்போது வரை தமிழகத்தில் 2.11 லட்சம் நபர்கள் நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 6.72 லட்சம் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. Neocov என்ற வைரஸ் வவ்வாலுக்கும் வவ்வாலுக்கும் பரவக்கூடியது. உலக சுகாதாரத்துறை அதிகார பூர்வமாக தெரிவிக்கும் வரை இது மனிதர்களுக்கு பரவும் என்ற செய்திகளை தவறாக பரப்ப வேண்டாம். மக்கள் தேவையின்றி பயப்பட வேண்டாம்” எனக் கூறினார்.