பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்

 
rahul gandhi

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

2019ம் ஆண்டு நிரவ் மோடி தப்பி ஓடிய விவகாரத்தில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறதது என ராகுல் காந்தி பேசியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, 'நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என, திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் ஏன் மோடி என்ற பெயர் இருக்கிறது எனப் பேசினார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக பாஜக அவதூறு வழக்கு தொடர்ந்தது.

சூரத் நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது ராகுல் காந்தி நேரில் ஆஜரானார்.  இந்த வழக்கை விசாரித்த சூரத் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா, பிரதமரை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் குற்றவாளி என தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருடம் சிறை தண்டனையும் வழங்கினார். இதனிடையே தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டு உள்ளது.  . 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்ய வசதியாக ராகுல் காந்திக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ரூ.15,000 பிணைத்தொகை செலுத்தி ராகுல் காந்தி ஜாமின் பெற நீதிமன்றம் உத்தரவிட்டது.