“ஓபிஎஸ் 6 மாசம் அமைதியா இருந்தா, எடப்பாடியிடம் அவருக்காக பேசுவோம்”- ராஜன் செல்லப்பா
அதிமுகவில் இணைய விரும்பும் ஓபிஎஸ் சிறிது காலம் அமைதியாக இருக்க வேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் கிராமத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற திண்ணை பிரச்சாரத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா, “எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய விரும்புவதாக ஓபிஎஸ் கூறுகிறார். தற்போது செல்வாக்கை இழந்துள்ள ஓபிஎஸ் அதிமுகவிற்கு எந்தவித இடையூறும் செய்யாமல் ஆறு மாத காலம் அமைதியாக இருந்தால் அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வது குறித்து தாங்கள் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் பேசி நடவடிக்கை எடுப்போம். அதிமுகவிற்கு 2026 ஆம் ஆண்டு வலிமையான எதிர்காலம் உள்ளது. தற்போது உச்சக்கட்டத்தை எட்டி தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

அதிமுக இரட்டை தலைமையாக இருந்த போதும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. தற்போது ஒற்றை தலைமையில் புதிய உச்சத்தை தொட்டு 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வகையில் தங்களுடைய பயணங்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறோம். அதிமுகவில் எந்தவித நிபந்தனையும் இன்றி இணைய ஓபிஎஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. அவருடைய செல்வாக்கு நன்றாக இருந்திருக்குமானால் பாஜகவை அவரை கட்சியில் இணைத்து இருக்கும். வழக்கு உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளை ஓபிஎஸ் போன்றோர் தொடர்ந்து அதிமுகவுக்கு துரோகம் இழைத்து வருகின்றனர். அது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுவது கட்சியின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. மூத்த உறுப்பினர்கள் இதுபோன்று செயல்படுவது அழகல்ல” என்றார்.


