ரஜினி மகள் லாக்கரில் வைத்திருந்த நகைகள் திருட்டு - வேலைக்கார பெண் கைது - அதிர்ச்சி தந்த அவரின் வங்கி பரிவர்த்தனைகள்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்தி வந்த விசாரணையில் வேலைக்கார பெண் சிக்கி இருக்கிறார். 60 சவரன் வைரம் மற்றும் தங்க நகைகள், நவரத்தின கற்கள் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் வேலைக்கார பெண் இன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா. இவர் தனது 60 சவரன் நகைகள் திருடு போயிருப்பதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். வீட்டின் லாக்கரில் வைரம் , தங்கம் என்று 60 சவரன் நகைகள் இருந்ததாகவும் அவை தற்போது மாயமாகி இருப்பதாகவும் இந்த புகாரில் கூறியிருந்தார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்திருக்கும் அந்த புகார் மனுவில், கடந்த 2019 ஆம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை 3 முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை. சென்னை செயின்ட் மேரி சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீடு என்று லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்தது.
இந்த லாக்கரில் இருந்த நகைகள் பற்றிய விவரம் வீட்டில் பணிபுரியும் மூன்று வேலைக்காரர்களுக்கு தெரியும் என்று புகார் மனுவில் தெரிவித்திருந்தார். கடந்த மாதம் இந்த புகாரை அளித்திருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகள் குறித்த விவரம் மூன்று வேலைக்காரர்களுக்கு தெரியும் என்பதால் அவர்கள் மீதும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
அதன் பின்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் இருந்த நாட்களில் உள்ள 60 சவரன் நகைகள் மாயமான விவகாரத்தில் வேலைக்கார பெண் ஈஸ்வரி என்ற 40 வயது பெண்ணை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். ஈஸ்வரியின் சமீபத்திய வங்கி பரிவர்த்தனைகளை போலீஸ் பார்த்தபோது அதிர்ந்தனர். அதன் மூலம் அவர்தான் நகைகளை திருடியது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.