விசாரணையில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு.. குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குக - ராமதாஸ்...

 
ராமதாஸ்


நகை திருட்டு வழக்கில் கைதாகி விசாரணையின்போது உயிரிழந்த  மாற்றுத்திறனாளி பிரபாகரன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டும் என   பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நாமக்கலில் நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி பிரபாகரன் , உடல் நலக்குறைவு காரணமாக சேலம்  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன் உயிரிழந்தார். காவல் துறை தாக்கியதால் தான் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளி பிரபாகரன்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்  , ”நகைத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பிரபாகரன் என்ற மாற்றுத்திறனாளி  உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. காவல்துறையினர் தாக்கியதே  மாற்றுத்திறனாளியின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ராமதாஸ்

ஜனவரி 8-ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்படாமல் சேந்தமங்கலம் காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக வைத்து தாக்கப்பட்டிருக்கிறார். அதனால், சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் பிரபாகரனுக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். ” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரனின் உயிரிழப்பு தொடர்பாக 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது போதுமானதல்ல. பிரபாகரனின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.”