போர்க்கால வேகத்தில் நீர் ஆதாரங்களை காப்பாற்றுக - ராமதாஸ் வலியுறுத்தல்...

 
ramadoss


தமிழ்நாட்டின் போர்க்கால வேகத்தில் நீர்வள ஆதாரங்களை காப்பாற்றவும் மேம்படுத்தவும் வேண்டும் என  பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.  

 இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “மார்ச் 22-உலக தண்ணீர் நாள் மாற்றத்தினை விரைவுப்படுத்துதல் (#AcceleratingChange) எனும் முழக்கத்தை முன்வைத்து, ஐநா நீடித்திருக்கும் மேம்பாட்டு இலக்குகளில் ஒன்றான தண்ணீர் - துப்புரவு குறிக்கோள்களை அடைவதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது. நீரின்றி அமையாது என்பது வள்ளுவர் வாக்கு. நீர் உருவாவதும் இல்லை. அழிவதும் இல்லை. நீர் சுழற்சி யுகம் யுகமாக தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

காவிரி நீர்

உயிர்வாழ்க்கை, உணவு, இயற்கை வளம், பொருளாதாரம், பண்பாடு என அனைத்திற்கும் நீர் இன்றியமையாதது. தண்ணீர் நெருக்கடியால் அதிகம் பாதிப்படையும் பகுதிகளில் ஒன்றாக தமிழ்நாடும் இருக்கிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக வறட்சி அதிகமாகிறது;மிகக் குறுகிய காலத்தில் மிக அதிக அளவு மழைப் பொழிவும் ஏற்படுகிறது. இவற்றால் தமிழ்நாட்டின் தண்ணீர் நெருக்கடி மென்மேலும் மோசமடையும் நிலையே உள்ளது.

எனவே, தமிழ்நாட்டின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் காப்பாற்ற போர்க்கால வேகத்தில் நீர்வள ஆதாரங்களை காப்பாற்றவும் மேம்படுத்தவும் வேண்டும். அதற்கான அனைத்து பணிகளையும் மத்திய, மாநில, உள்ளாட்சி அரசுகள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்..