2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும் - ராமதாஸ்..!
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது போல் தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும், வந்தே தீரும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும், கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இருவரையும் சமாதானப்படுத்த பலரும் முயற்சித்து வரும் நிலையில், கடந்தவாரம் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்ற அன்புமணி தந்தையுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோரை சந்தித்து ஆலோசனை செய்தார். மேலும், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் கவிதாவின் இல்லத்திலும், குடும்பத்தினர் இணைந்து ராமதாஸை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 3வது நாளான இன்று சென்னை, கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “நேற்று பல் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்றேன். இன்று கண் மருத்துவரை சந்திக்க உள்ளேன். சொல்வதற்கு செய்தி ஒன்றும் இல்லை. தைலாபுரம் தோட்டத்தில் வழக்கமாக வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம் அது போல் வரும் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்திக்கிறேன். 2026 திமுக ஆட்சி அகற்றப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த கருத்து தொடர்பான கேள்விக்கு, 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும், வந்தே தீரும்” எனத் தெரிவித்தார்.


