அன்புமணிக்கு 'அதிர்ச்சி' கொடுத்த ராமதாஸ்: "பாமக பெயர், கொடி, சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது!

 
1 1

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திறமையில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, செயல் தலைவர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 20 பேர் கலந்து கொண்டனர். இந்த நிர்வாக குழு கூட்டத்தில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் பங்கேற்கவில்லை.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், "என்னுடைய தலைமையில் நிர்வாக குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. நடப்பு அரசியல் சூழ்நிலை குறித்து நிர்வாக குழு அலசி ஆராய்ந்து சில முடிவுகளை எடுத்துள்ளோம். டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்த கருத்தின்படியும், நீதிமன்ற தீர்ப்பின் படியும் அன்புமணி பாமக தலைவர் என்று சொல்ல முடியாது, சொல்லக்கூடாது. பாமகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், பாமகவின் தலைவர் என்று அன்புமணி கூறி வருகிறார். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்.

பாமகவின் தலைவர் நான் தான் என்று அன்புமணி கூறுவதை ஊடகங்கள் வெளிப்படுத்தக்கூடாது என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். டெல்லி நீதிமன்றம் தீர்ப்பின்படி பாமகவின் சின்னம், கொடி, பெயர் உள்ளிட்டவற்றை அன்புமணி உபயோகப்படுத்தக் கூடாது. அப்படி உபயோகப்படுத்தினால் அது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். பாமகவின் தலைவர் என அன்புமணி கூறுவதை ஊடகங்கள் அப்படியே போடுகிறீர்கள். அது எனக்கு வருத்தமாக உள்ளது. இனியாவது அப்படி செய்ய வேண்டாம் என்று உங்களை பாசத்தோடு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் கூட்டணி முடிவை விரைந்து அறிவிக்க வேண்டும் என்று இந்த நிர்வாக குழுவில் கேட்டுக் கொண்டார்கள். ஏனென்றால் எனக்கு அந்த அதிகாரத்தை சேலத்தில் நடந்த பொதுக்குழு கொடுத்திருக்கிறது. கூட்டணி பற்றியும் விரிவாக இந்த நிர்வாக குழுவில் பேசினோம். சீக்கிரமே ஒரு நல்ல முடிவை உங்களுக்கு அறிவிப்போம். பாமக அமைக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும்.

இதுதான் சிறந்த கூட்டணி, நல்ல கூட்டணி, நாணயமான கூட்டணி என்று மக்கள் பேசுகின்ற அளவுக்கு இந்த கூட்டணி அமையும். அப்படிப்பட்ட கூட்டணியை அமைக்க தீவிரமாக முயன்று வருகிறோம். இதுவரை வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 4109 விருப்ப மனுக்களை பெற்றுள்ளோம். இது பாமக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத நிகழ்ச்சி ஆகும். இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார்.

கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "மிக விரைவில் கூட்டணி தொடர்பாக அறிவிப்பு வெளியாகும்" என்றார். மேலும், எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதி குறித்த கேள்விக்கு, "எப்படியாவது ஓட்டு வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம். இதனை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். மக்கள் தான் எஜமானர்கள். மக்கள் சரியாக வாக்களிப்பார்கள். ஆனால் நாங்கள் சேரப்போகிற கூட்டணி அது வெற்றி கூட்டணியாக இருக்கும்" என்றார்.