“சுங்கச்சாவடி ஆண்டுக் கட்டணத்தை குறைக்க வேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல்..
சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு ஆண்டுக்கு 3,000 ரூபாய் என்பதை 1,500 ரூபாயாக குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சுங்கச்சாவடிகளில் தனியார் வாகனங்களுக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் பாஸ் அறிமுகப்படுத்தப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அறிவித்திருந்தார். ரூ.3000 செலுத்தி பாஸ் பெற்றுக்கொண்டால் 200 முறை சுங்கச்சாவடிகளை கடக்கலாம் என தெரிவித்தார். இந்நிலையில் இதனை சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு கார், ஜீப், வேன் ஆகியவைகளுக்கு சுங்கச்சாவடியை கடந்து செல்ல ஆண்டுக்கு ரூபாய் 3,000 என்றும் அல்லது சுங்கச் சாவடியை 200 முறை வரை கடக்கலாம் என்றும் புதிய விதியினை தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல. தனியார் வாகனங்களை பொறுத்தவரை (ஓன் போர்டு வாகனங்கள் உள்ளிட்டவைகள்) சுங்கச்சாவடியை பயன்படுத்தும் காலம் சொற்பமாக உள்ளதால் இந்த கட்டணம் மிகவும் கூடுதலான தொகையாகும்.
எனவே இந்த வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1,500 வீதம் நடைமுறைப்படுத்துவதே சிறந்த வழிமுறை என கருதுகிறேன். அதோடு, மேலே குறிப்பிட்ட தனியார் வாகனங்களுக்கு 3,000 ரூபாய் ஆண்டுக்கு கட்டணம் என்பதனை வணிக மற்றும் சிறிய சரக்கு வாகனங்களுக்கு பயன்படும் வகையில் நடைமுறைப்படுத்தினால் அவர்களுக்கான நிதி சுமை குறையும் என்பதனை கருத்தில் கொண்டு இதனை நடைமுறைப்படுத்த வேண்டுகிறேன்.” என்று வலியுறுத்தியுள்ளார்.


