சமூகநீதிக் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியைத் தொடர உறுதியேற்போம் - முதல்வர் ஸ்டாலின்

 
stalin

ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்தநாளில் அவரது சமூகநீதிக் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியைத் தொடர உறுதியேற்போம் என்று  முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

tn

சிவ சிதம்பர ராமசாமி படையாச்சி தமிழக அரசியல்வாதியும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். தமிழக அமைச்சரவையில் உறுப்பினராகவும் இந்திய மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். இவரின் பெயரே விழுப்புரம் மாவட்டத்தின் முந்தைய பெயராகும். 1951 இல் வன்னிய சங்கம் ஒரு சாதி மாநாட்டைக் கூட்டி வன்னியருக்காக ஒரு மாநிலந்தழுவிய கட்சியினை உருவாக்க முயன்றது. ஆனால் தலைவர்களுக்குள் இருந்த வேறுபாடால் இம்முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக வட ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்த எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர் காமன்வீல் கட்சியினைத் தொடங்கினார். தென்னாற்காடு மற்றும் சேலம் மாவட்ட வன்னியர்கள் ராமசாமி படையாச்சியின் தலைமையில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற மற்றொரு கட்சியைத் தொடங்கினர். ராமசாமி படையாட்சி உட்பட 19 உழைப்பாளார் கட்சி வேட்பாளர்கள் 1952 தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  1954ல் காமராஜர் முதல்வரான பின்னர் ராமசாமி அவரது அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார். 1954ல் அவர் தன் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார். 1962 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது காங்கிரசிலிருந்து விலகிய ராமசாமி மீண்டும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார். தேர்தலில் சுதந்திராக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவர் உட்பட இக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர்.  1967 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தார். ஆனால் திமுக தன் கூட்டணியில் இக்கட்சியை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது. சிறிது காலத்துக்குப் பின்னர் ராமசாமி கட்சியை மீண்டும் கலைத்து விட்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்துவிட்டார். 1980 மற்றும் 1984 பொதுத்தேர்தல்களில் காங்கிரசு சார்பாக திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992 இல் மரணமடைந்தார்.



இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "விடுதலைப் போராட்ட வீரரும், பெருந்தலைவர் காமராசரின் அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராகப் பணியாற்றியவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்தநாளில் தமிழ்நாட்டுக்காகவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காவும் அவர் ஆற்றிய பணிகளை நன்றியுடன் போற்றி, அவரது சமூகநீதிக் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியைத் தொடர உறுதியேற்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.