கனவாகிப்போன நந்தன் கால்வாய் சீரமைப்பு திட்டம் - ராமதாஸ் கோரிக்கை..

 
ramadoss


நந்தன் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட உழவர்களின் கனவான நந்தன் கால்வாய் சீரமைப்புத் திட்டம் நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்னும் கனவாகவே தொடருகிறது. நந்தன் கால்வாயில் அவ்வப்போது சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும், அவை எதுவும் நந்தன் கால்வாய் பாசனப் பகுதிகளின் தேவையையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றவில்லை என்பது தான் உண்மையாகும். 

நந்தன் கால்வாய் சீரமைப்புத் திட்டம்

நந்தன் கால்வாய் முழுமையாக சீரமைக்கப்பட வேண்டும். கீரனூர் அணையில் தொடங்கும் நந்தன் கால்வாய் பனைமலை ஏரியில் முடியும் வரை சில இடங்களில் மட்டும் கால்வாய் மீது சிமிட்டி பூச்சு பூசப்பட்டுள்ளது; சில இடங்களில் மட்டும் கால்வாய்க் கரைகள் மீது தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிற இடங்களில் மண் பூச்சும், மண் சாலைகளும் தான் உள்ளன. இந்த நிலையை மாற்றி கால்வாயின் தொடக்கம் முதல் இறுதி வரை சிமிட்டி பூச்சும், தார் சாலைகளும் அமைக்கப்பட வேண்டும். நந்தன் கால்வாயில் பல இடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும்.

நந்தன் கால்வாய் தொடக்கம் முதல் இறுதி வரை உள்ள 37.60 கி.மீ நிலப்பரப்பும் ஒரு மாவட்ட நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டும். மேற்கண்ட அனைத்துக் கோரிக்கைகளும் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும். இதை வலியுறுத்தி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விரைவில் திருவண்ணாமலை-விழுப்புரம் மாவட்டங்களில் விழிப்புணர்வு பரப்புரை பயணம் மேற்கொள்வார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.