ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் : 15 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தல்..
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்களையும், படகுகளுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் (ஜூலை 8) மீன்பிடிப்பதற்காக அனுமதி சீட்டு பெற்று, சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு விசை படகுகளையும், அதிலிருந்த 15 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச்சென்ற இலங்கை கடற்படையினர் , யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். வரும் 24ஆம் தேதி வரை அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்களையும், படகுகளுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் சுமார் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மின்பிடிக்கச் செல்லாமல், நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேலை நிறுத்த போராட்டத்தினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 3000 மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசுக்கும் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.