படத்தில் நடிக்க ரூ.6 கோடி பெற்ற ரவிமோகன் - ஐகோர்டில் வழக்கு தொடர்ந்த தயாரிப்பு நிறுவனம்..
நடிகர் ரவி மோகன் மீது பிரபல தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
நடிகர் ரவி மோகன் படத்தில் நடிப்பதற்காக பெற்ற ரூ.6 கோடி முன்பணத்தை திரும்ப தரக்கோரி, பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றம் மனு அளித்துள்ளது. அந்த மனுவில், கடந்த 2024ம் ஆண்டு நடிகர் ரவி மோகனுடன் 2 படங்களை தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், அதற்காக ரூ.6 கோடியை முன்பணமாக ரவி வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் படத்திற்கான கால்ஷீட் கொடுத்தும் படப்பிடிப்பு பணிகளை தொடங்காததால் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம், அந்தப்பணத்தை சொந்த தயாரிப்பு அல்லது சொந்த செலவுகளுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளதால் பணத்தை திரும்ப தரக்கோரி வலியுறுத்தியுள்ளது.

மேலும் ‘ப்ரோ கோட்’ படத்தை தயாரிக்கவும், வேறு நிறுவன தயாரிப்பில் நடிக்கவும் ரவி மோகனுக்கு தடை விதிக்க வேண்டும் அந்நிறுவனம் மனுவில் குறிப்பிட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுபனம் தாக்கல் செய்துள்ள புகார் மனுவுக்கு ரவிமோகன் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
‘ப்ரோ கோட்’ திரைப்படத்தை நடிகர் ரவி மோகனின், ‘ரவிமோகன் ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கும் நிலையில், அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். வடக்குப்பட்டி ராமசாமி, டிக்கிலோனா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கும் இந்தப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


