ஓபிஎஸ் - தினகரன் சந்திப்பு : அதிமுக முன்னாள் அமைச்சர் விளாசல்!!
ஓ. பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் இணைப்பு சந்தர்ப்பவாத சந்திப்பு என்று ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் இணைப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் , ஓபிஎஸ் - தினகரன் சந்திப்பு சந்தர்ப்பவாதி சந்திப்பாகவே இருக்கிறது. இதனால் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படாது. இதை நாம் பொருட்படுத்த வேண்டாம். மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் தற்போது அடைக்கலம் தேடி தனது அடையாளத்தை தொலைத்து விடக்கூடாது என்பதற்காக அங்கு சென்று இருக்கிறார்.
உச்ச நீதிமன்றம் வரை சென்றார். நேற்று கட்சியிலிருந்து நீக்கி இன்று உடனே இந்த சந்திப்பு நிகழவில்லை. கடந்த 10 மாதங்களாக நீதிமன்றம் சென்று அவர் வைத்த வாதங்கள் தோல்வியடைந்த பிறகு , தொண்டர்கள் இடத்தில் தோல்வி, மக்களிடத்தில் நம்பிக்கை இழந்த பிறகு, யாரை எதிர்த்தாரோ, எந்த குடும்பத்தினர் தமிழகத்தில் அதிமுகவில் இருக்கக் கூடாது என்று தர்மயுத்தம் நடத்தினாரோ , அந்த குடும்பத்திடம் அடைக்கலம் தேடி சென்றுள்ளார். சுயநலத்திற்காக, எதிர்காலத்திற்காக, பதவிக்காக சென்றுள்ளார். ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களால் ஏற்றுக் கொண்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில் கட்சியில் இருந்து குழப்பமும் ஏற்படாது. தொண்டர்களும் மக்களும் தெளிவாக இருக்கின்றனர் என்றார்.