கடலில் விழுந்த ககன்யான் திட்டத்தின் மாதிரி கலன் மீட்பு
ககன்யான் திட்டத்தின் மாதிரி கலனை கப்பலில் சென்று இந்திய கடற்படையினர் மீட்டனர்
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட பணியில் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. 400 கிலோமீட்டர் தூரம் சுற்றுவட்ட பாதைக்கு விண்கலம் மூலம் மூன்று வீரர்களை அனுப்பி அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு செயல்படுத்த உள்ள நிலையில், அதற்கு முன்பாக மூன்று கட்ட சோதனைகளை மேற்கொள்கிறது இஸ்ரோ. அந்த வகையில் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை இன்று நடைபெற்றது. விண்கலத்தை இன்று விண்ணுக்கு செலுத்தி மீண்டும் பூமியில் தரையிறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில், ராக்கெட் எஞ்சினில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக சோதனை ஓட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அந்த கோளாறு சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. சரியாக 10 மணிக்கு ககன்யான் விண்கலம் விண்ணில் பாய்ந்தது.
இந்த நிலையில், ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார். திட்டமிட்டபடி விண்ணுக்கு சென்ற ககன்யான் விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்பியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள இஸ்ரோ தலைவர் சோம்நாத், ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலத்தின் சோதனை வெற்றி பெற்றுள்ளது. திட்டமிட்டபடி ககன்யான் விண்கலத்தின் மாதிரி வங்க கடலில் தரையிரங்கியது என கூறினார். இந்த நிலையில், ககன்யான் திட்டத்தின் மாதிரி கலனை கப்பலில் சென்று இந்திய கடற்படையினர் மீட்டனர். டிவி-டி1 ராக்கெட் மூலம் ககன்யான் மாதிரி கலன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட்டில் இருந்து பிரிந்த மாதிரி கலன் வங்கக்கடலில் பாராசூட் மூலம் இறக்கப்பட்டது. கடலில் இறக்கப்பட்ட மாதிரி கலனை கப்பலில் சென்று கடற்படையினர் மீட்டனர்.