கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் - தமிழகத்திற்கும் எச்சரிக்கை!

 
rain

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் இன்று அதிகனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதாவது, கேரளா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், அங்கு ரெட் அலர் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆந்திரா, கோவா, தெலங்கானா, தமிழ்நாடு, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக  இன்று  நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.