அதிகரிக்கும் ஒமைக்ரான்: தமிழகத்தில் சுழற்சி முறை வகுப்புகளே தொடரும்??..
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் ஆன்லைன் மூலமும், அரசின் கல்வி தொலைக்காட்சி மூலமும் வகுப்புகள் நடத்தப்பட்டன. பின்னர் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. 1 முதல் 9 வரையிலான வகுப்பு வரையிலான தொடக்க மற்றும் நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் 2022 ஜனவரி 3 ஆம் தேதி முதல் சுழற்சி முறையிலான வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, தொடர் வகுப்புகள் நடத்தப்படும் என சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வந்தாலும், ஒமைக்ரான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. நேற்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தொடக்க மற்றும் நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையிலான வகுப்புகளே நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகி வருகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தற்போது அரசின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. ஆன்லைன் கல்வி மூலம் மானவர்கள் கற்றல் திறனை இழந்து வருவதால், அரசு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளே தொடர வேண்டும் என நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இதனால் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், கண்காணிப்புடன் பள்ளிகளில் நேரடி வகுப்புகளே செயல்படும் என்று தெரியவந்துள்ளது. மேலும் oமைக்ரான் அதிகரித்து வருவது குறித்து, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளின் உயர்மட்ட அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில், சுழற்சி முரையில் வகுப்புகளை தொடரலாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சத்து மாத்திரைகள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.