அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்யும் வசதி அமலுக்கு வந்தது!
அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்யும் வசதி இன்றுமுதல் அமலுக்கு வந்தது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தொலைதூரப் பயணிகளின் வசதிக்காக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் பயணிகளின் பாதுகாப்பிற்கும் மற்றும் வசதியான பயணத்திற்காகவும் ஒரு மாதத்திற்கு முன் இருக்கைகளை இணையதளம் மற்றும் கைபேசி மூலம் முன்பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தினசரி சுமார் 60,000 பயணிகளில் 20,000 பயணிகள் வரை முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வசதியினை அரசு பேருந்துகளில் 200 கி.மீ. தூரத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக விரிவு படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப்படுகிறது. இதன்காரணமாக தற்போது ஒரு நாளைக்கான முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி 51,046 இருக்கைகளிலிருந்து 62,464 இருக்கைகள் வரை அதிகப்படுத்தி கூடுதல் பயணிகள் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் உள்ளது போல மாநிலத்தில் 200 கிலோமீட்டர் தூரம் செல்லும் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது .தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் முன்பதிவு செய்து இனி பயணிக்கலாம். இந்த வசதியை பெற tnstc.in மற்றும் tnstc mobile app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.