கருப்பு பேட்ச் அணிந்து வந்த வருவாய்த்துறையினர்
May 29, 2023, 12:11 IST1685342491662
மணல் கடத்தலை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளரை தாக்கிய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் வருவாய்த்துறையினர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கருப்பு பேட்ச் அணிந்து வந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் திமுகவை சேர்ந்த மகேஸ்வரன், தனபால், மணி ஆகிய மூவரும் சேர்ந்து நரசிங்கபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள பச்சைமலை பகுதியில் ஜே.சி.பி. உதவியுடன் செம்மண் கடத்தினர். இதுக்குறித்து தகவலறிந்து மணல் கடத்தலை தடுக்க வந்த துறையூர் பகுதி வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து தாக்கினர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கருப்பு பேட்ச் அணிந்து வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். துறையூர் பகுதியில் நேற்று மணல் கடத்தலை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளரை தாக்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட நான்கு பேருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ச் அணிந்து பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.