ரிதன்யா தற்கொலை வழக்கு: பதிலளிக்க கால அவகாசம் கேட்ட கணவர்.. விசாரணை ஒத்திவைப்பு..
ரிதன்யா தற்கொலை வழக்கில் கணவர் குடும்பத்தினர் பதிலளிக்க அவகாசம் கேட்டதால், விசாரணை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கடந்த சனிக்கிழமை வரதட்சணை கொடுமை காரணமாக ரிதன்யா என்கிற இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். 300 சவரன் நகைகள் மற்றும் 75 லட்சம் ரூபாய் மதிப்பில் வரதட்சனை கொடுத்தும், மேலும் 200 சவரன் நகை வேண்டும் என கணவர் குடும்பத்தினர் ரிதன்யாவை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ரிதன்யாவின் கணவர் கவின் குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கவின் குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் நீதிமன்றத்தில் ஜாமின் வழங்கக்கோரி மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு நேற்று திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது அப்போது, ரிதன்யாவின் பெற்றோர் குடும்பத்தினர் தரப்பில் இந்த மனுவின் மீது இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கவின் குமாருக்கும், ஈஸ்வர மூர்த்திக்கும் ஜாமின் வழங்கக் கூடாது என அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். அப்போது வாதாடிய ரிதன்யா தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே அவர்கள் ஜாமீன் கோரியுள்ளதாகவும், அவர்களுக்கு ஜாமீன் வழங்க ரிதன்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும், வழக்கின் மூன்றாவது குற்றவாளியான கவின் குமாரின் தாயார் போலீசாரால் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், அவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் மட்டுமே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.
இந்த இடையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வர மூர்த்தி தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைத்து திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.


