ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியார் சித்ரா தேவி கைது..!!
அவிநாசி ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது மாமியார் சித்ரா தேவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கடந்த சனிக்கிழமை வரதட்சணை கொடுமை காரணமாக ரிதன்யா என்கிற இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். 300 சவரன் நகைகள் மற்றும் 75 லட்சம் ரூபாய் மதிப்பில் வரதட்சனை கொடுத்தும், மேலும் 200 சவரன் நகை வேண்டும் என கணவர் குடும்பத்தினர் ரிதன்யாவை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கோவிலுக்குச் சென்று வருவதாகக் கூறி காரில் சென்ற ரிதன்யா, அவிநாசி சாலையோரம் காரை நிறுத்திவிட்டு தந்தைக்கு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் நோட் அனுப்பிவிட்டு பூச்சிமந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ரிதன்யாவின் கணவர் கவின் குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கவின் குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் நீதிமன்றத்தில் ஜாமின் வழங்கக்கோரி மனுதாக்கல் செய்துள்ளனர். அதேநேரம் ரிதன்யாவின் பெற்றோர் குடும்பத்தினர் தரப்பில், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், வழக்கின் மூன்றாவது குற்றவாளியான கவின் குமாரின் தாயார் சித்ரா தேவி போலீசாரால் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், அவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் மட்டுமே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.
இந்த இடையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வர மூர்த்தி தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ரிதன்யாவின் தந்தை திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அதில் ரிதன்யாவின் மாமியாரை கைது செய்ய வேண்டும் என்றும், ஏற்கனவே கைதாகியுள்ள கணவர் மற்றும் மாமனாருக்கு உச்சபட்ச தண்டனை வழங்கம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து ரிதன்யா தற்கொலை வழக்கில் , 3வது குற்றவாளியான அவரது மாமியார் சித்ரா தேவியை போலீஸார் கைது செய்துள்ளனர். சேயூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.


